மனச்சோர்வு திரும்பி வரும்போது என்ன செய்வது? 🤔

முகப்பு ›› அற்புதங்கள் ›› மனச்சோர்வு திரும்பி வரும்போது என்ன செய்வது? 🤔

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். [6] என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.” (சங்கீதம் 42:5-6)

ஆண்டவரே, என் ஆத்துமா எனக்குள் கலக்கமடைந்திருக்கிறது… சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ அதை விட்டுவிட்டாய் என்று நினைக்கும்போது, ​​அது பழிவாங்கும் வண்ணமாக திரும்பி வந்தால் நீ என்ன செய்வாய்?

ஒரு நண்பரிடம் பேசுவதுபோல் ஆண்டவரிடம் பேசுவதும், உன் துயரங்களை அவருடன் உண்மையாகப் பகிர்ந்துகொள்வதுமே மிகச் சரியான செயல் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாய் இருந்த தாவீது இதை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்: “அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னை விட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.” என்றார். (சங்கீதம் 6:8)

இயேசுதாமே கெத்செமனே தோட்டத்தில் வேதனையை அனுபவித்தார்: “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.” (மத்தேயு 26:41-43)

சில நேரங்களில் நாம் பலவீனமாக இருக்கிறோம். ஆனால் நீ இயேசுவை நோக்கிப்பார்: அவர் உனக்காக இதையெல்லாம் அனுபவித்தார். எனவே நீ கலக்கமடைய வேண்டியதில்லை. பெரும்பாலும், நாம் சீஷர்களைப் போல, துக்கத்தால் சோர்வடைந்து தொய்ந்து காணப்படுகிறோம்… வலியை எதிர்கொள்வதை விட, வலியிலிருந்து தப்பித்துக்கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாதே!

நீ மீண்டும் தைரியத்துடன் எழ வேண்டும் என்றும், மீண்டும் முன்னேறத் தொடங்க வேண்டும் என்றும், வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை இனிமையாகப் பார்க்க வேண்டும் என்றும் ஆண்டவர் விரும்புகிறார். வாழ்க்கையை வாழ்வதே சாலச் சிறந்தது. அவர் உனக்காக ஒரு எதிர்காலத்தை வைத்திருக்கிறார்!

“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (எரேமியா 29:11)

ஆபிரகாம் லிங்கன் சொன்ன சில வார்த்தைகளை நான் இன்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன்: “உன்னைக் கலக்கமடையச் செய்யும் எந்தவொரு உணர்வும் உன்னைத் தாக்க இடமளிக்காதிருந்தால், இறுதியில் நீ வெற்றி பெறுவாய்.”

தம்முடைய பலத்தால் உன்னை நிரப்ப விரும்பும் ஒரு ஆண்டவர் உனக்கு அருகில் இருக்கிறார். நீ வெற்றி பெறுவதை எதுவும் தடுக்க முடியாது!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இந்த மின்னஞ்சலுக்கு நான் பதில் எழுதுவேன் என்று நினைத்துப்பார்க்கவில்லை. மிக்க நன்றி. உங்களது மின்னஞ்சல்களை நான் தினமும் வாசிக்க முயல்கிறேன். ஏனென்றால் வாழ்வின் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல், அவை எப்பொழுதும் பேசுவதாக தோன்றும். எனது பிறந்த நாளான இன்றும், இதை உணர்கிறேன். மூன்று நாட்களுக்கு முன்பு என் குடும்ப உறவில் ஒரு மிகப்பெரிய விரிசலை அனுபவித்தேன். நான் நேசித்த ஒருவரை விட்டுப் பிரிந்துவிடுவேன் என்று நினைத்துப்பார்த்ததில்லை, ஆனால் ஆண்டவர் என்னுடன் இருந்தார் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் முன்பு பலமுறை எனக்குத் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த நபர் எப்போதும் என்னுடன் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் இப்போது, எனது 32வது வயதில், என் கண்கள் திறக்கப்படவும், என்னையும் என் எதிர்காலத்தையும் நானே கவனித்துக்கொள்ளவும், ஆண்டவர் விரும்புகிறபடி மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவும் வேண்டும் என்ற அவரது அழைப்பு எனக்குத் தேவைப்பட்டிருக்கலாம். அது நான் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை. உங்களது மின்னஞ்சலுக்காக மீண்டும் நன்றி சொல்கிறேன்; உங்களைப் போன்றவர்களுக்கும், மற்றவர்களை வளரச் செய்வதையே தங்கள் பணியாகக் கொண்டவர்களுக்கும் ஆண்டவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். நம் அனைவருக்கும் போராட்டங்கள் உள்ளன. நம் அனைவருக்கும் ஆண்டவரது அன்பு தேவைப்படுகிறது. மேலும் ஆண்டவரது ஒளியானது நம் வாழ்வின் மூலம் பிரகாசிக்கும்படி, சமாதானம் மற்றும் நேர்மறையான எதிர்காலம் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு நாளும் நாம் நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அது நமக்கு நினைவூட்டுகிறது.” (பிரின்ஸ்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!