நீ உணர்வதை அறிக்கையிடு, உனக்குத் தெரிந்ததை பிரகடனப்படுத்து
முகப்பு ›› அற்புதங்கள் ››
வேதாகமத்தில் மிகவும் பிரபலமான ராஜாவான தாவீது ராஜா, மக்களை ஆட்சி செய்வதற்கு முன்பு ஆடுகளை மேய்த்து வந்தார். ஒரு தீர்க்கதரிசியான சாமுவேல் அவருடைய நகரத்திற்குச் சென்று, இளம் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்தபோதுதான், அவரது பயணம் தொடங்கியது (1 சாமுவேல் 16:13)
இருப்பினும், இந்த அசாதாரண சந்திப்புக்குப் பிறகும், அவரது வாழ்க்கை உடனடியாக மாறவில்லை. தாவீது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனாகத் திரும்பினார், மேலும் அவரது சகோதரர்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்ட நபராக இருந்தார் (1 சாமுவேல் 17:28)
தாவீது அபிஷேகம் செய்யப்பட்ட நாளிலிருந்து அவர் ராஜாவான நாள் வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்து சென்றன. 😳
அந்த 15 ஆண்டுகள் தாவீதின் “இடைப்பட்ட காலமாக” இருந்தது; தாவீதின் பாதை அவருக்குத் தெரிந்திருந்தது, ஆனால் சாமுவேலின் வார்த்தைகள் யதார்த்த நடைமுறைக்கு வெகு தொலைவில் இருந்தன. அந்த அற்புதமான தீர்க்கதரிசனம் எப்போதாவது நிறைவேறுமா என்று தாவீது சில சமயங்களில் யோசித்திருப்பார் என்று நான் நம்புகிறேன். இதற்கிடையில், அவர் குகைகளில் ஒளிந்துகொள்ள வேண்டியிருந்தது (1 சாமுவேல் 24:3) மிகப்பெரிய அளவில் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது (1 சாமுவேல் 30:1-6) மற்றும் தனது உயிருக்காக தப்பி ஓட வேண்டியிருந்தது (1 சாமுவேல் 19:10-18)
தாவீதைப் போலவே, ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணின காலங்களை நாம் அறிந்திருந்தாலும், எதுவும் நடப்பதாகத் தெரியவில்லையே என்று நாம் நினைக்கலாம்.
இந்த “இடைப்பட்ட” காலத்தை தாவீது சந்தித்த விதமானது பொறுமை மற்றும் விசுவாசத்துக்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறது. பலனைத் துரிதப்படுத்துவதற்குப் பதிலாக, தாவீது ஆண்டவருடைய சமயத்துக்காகக் காத்திருக்கத் தேர்ந்தெடுத்தார். இரண்டு முறை, அவர் ஆட்சி செய்யும் ராஜாவான சவுலைக் கொன்று தனது கிரீடத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் (1 சாமுவேல் 24 மற்றும் 26), ஆனால் தாவீது அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். தன்னை அபிஷேகித்த தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை ஏற்ற நேரத்தில் நிறைவேற்றுவார் என்று அவர் விசுவாசித்தார்.
தாவீது சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டபோது, இவ்வாறு எழுதினார்:
“நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.” – சங்கீதம் 27:13-14
தாவீது தான் உணர்ந்ததை அறிக்கையிட்டார், ஆனால் தனக்குத் தெரிந்ததை பிரகடனம்பண்ணினார்.
நீ “இடைப்பட்ட” பருவத்தை எதிர்கொள்வாயானால், சங்கீதம் 27ஐ தியானித்துப்பார். அதை சத்தமாக வாசித்து, “சத்துருக்கள்” அல்லது “தீங்கு” போன்ற வார்த்தைகளை உன் குறிப்பிட்ட சவால்களுடன் ஒப்பிட்டு, அவைகளுக்காக ஜெபி. கர்த்தர் சமூகத்தில் சில நிமிடங்கள் அமைதியாக காத்திருந்து, இந்த தியானத்தை நிறைவுசெய்வாயாக.