தேவ பெலனுக்கான வாக்குத்தத்தம்
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று சிறிது நேரம் ஒதுக்கி, ஜெபத்தில் நாம் ஆண்டவரிடத்தில் பேசுவோம்.
“இயேசுவே, நீர் ஒருபோதும் சோர்ந்துபோவதுமில்லை, களைப்படைவதுமில்லை என்பதால் உமக்கு நன்றி. உமது குறைவற்ற பெலன் மற்றும் வல்லமைக்காகவும், அந்த வல்லமையை எங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவும் உம்மைத் துதிக்கிறோம். ஆண்டவரே, என் வாழ்வுக்கான உமது நோக்கத்தை நிறைவேற்ற, இந்த நேரத்தில் உமது அற்புதமான பெலத்தை எனக்குத் தந்தருளும். இன்று உமது மகிமைக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு நாங்கள் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.”
நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போதகராக இருக்கிறேன். நான் ஆயிரக்கணக்கான செய்திகளை இந்தக் காலகட்டங்களில் பிரசங்கித்திருக்கிறேன். உனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன் – அது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் பிரசங்கிக்கும் முன்பு நான் இன்னும் மிகவும் பதட்டமடைகிறேன். ஒவ்வொரு வார இறுதியிலும், நான் பிரசங்கிப்பதற்கு முன் பதட்டமடைவதால் என் வயிற்றில் சிறிது கிளர்ச்சி ஏற்படும். இதனாலேயே ஞாயிற்றுக்கிழமை காலை உணவு என்பது எனது விருப்பப் பட்டியலில் இல்லாமற்போனது!
ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதில் நான் மிகவும் சிரத்தையுடன் இருக்கிறேன். இயேசுவின் அற்புத வல்லமையைப் பற்றி மக்கள் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக நான் ஆண்டவருடன் ஆழமாக இணைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன். நான் பிரசங்கிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுடன் கொண்டு செல்லும் வாக்குத்தத்தங்களில் ஒன்று ஏசாயா 41ஆம் அதிகாரத்தில் உண்டு, அங்கு ஆண்டவர் இவ்வாறு கூறியுள்ளார்:
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10)
ஆண்டவருடைய குறைவற்ற பெலன் இன்று உனக்குக் கிடைக்கிறது! இன்று ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் அனைத்தையும் நிறைவேற்ற அந்த வல்லமைக்குள் நீ பிரவேசிக்கலாம். அதோடு கூட, நீ வாக்குத்தத்தத்தைப் பெற்றிருப்பதால் பயமின்றி அதைச் செய்யலாம். ஆண்டவருடைய கரம் இப்போது உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது! அவர் உன்னைப் பிடித்து, உன் மனதையும் சரீரத்தையும் தமது பெலத்தினால் நிரப்புகிறார். இன்று உன் வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழு!
நான் உனக்காக ஜெபம் செய்கிறேன்.
நீ ஒரு அதிசயம்!