உன் பணம் எனக்குத் தேவையில்லை
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, “உன் பணம் எனக்குத் தேவையில்லை!” என்று இயேசு உன்னைப் பார்த்துச் சொல்ல விரும்புகிறார். அப்படியானால் அவருக்கு வேறு என்ன வேண்டும்?
மாற்கு 10ஆம் அத்தியாயத்தில், ஒரு ஐசுவரியவான் இயேசுவினிடத்தில் வந்து, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறான். அப்பொழுது இயேசு அவனுக்கு ஒரு பட்டியலைத் தருகிறார். அதில், “விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்று சொல்லப்பட்டுள்ளது.
“இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்” என்று அந்த மனிதன் பெருமிதத்துடன் பதிலளித்தான். அதன் பின்னர் இயேசு அவனைப் பார்த்து, “ஒரு காரியம் செய்” என்று சொன்னார். அது என்னவென்று பார்ப்போம்.
“இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.” (வசனம் 21).
யாராவது உன்னைப் பார்த்து, “ஒரு காரியம் செய்” என்று சொல்லிவிட்டு, அதைத் தொடர்ந்து, “உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்றுவிடு” என்று சொல்வதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
அது ஒரு நினைவுச் சின்னமாக விளங்கும் ஒரு ‘காரியமாக இருக்கும்!’ இருப்பினும், இயேசு இந்த மனிதனின் வாழ்க்கையை சிக்கலில் தள்ள முயற்சிக்கவில்லை, அதேவேளையில், ஆண்டவர் ஐசுவரியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை.
அந்த வசனத்தில், ‘இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்தார்’ என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசு இந்த மனிதனின் ஐசுவரியத்தைப் பற்றி கவலைப்படவில்லை, மாறாக அவனுடைய இருதயத்தைப் பற்றித்தான் அக்கறையுள்ளவராய் இருந்தார்! ஐசுவரியவானின் செல்வம் தம்மை முழு மனதுடன் பின்பற்றுவதற்கு ஒரு தடையாக இருப்பதை இயேசு அறிந்ததால், அவர் அந்த ஐசுவரியவானுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார்.
“உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்”. (எரேமியா 29:13)
இயேசுவை முழு மனதுடன் பின்பற்றுவதிலிருந்து உன்னைத் தடுக்கும் விஷயங்கள் ஏதாவது உன் இதயத்தில் இருக்கிறதா? ஐசுவரியவான் கேட்ட அதே கேள்வியை நாம் இயேசுவிடம் கேட்போம். நாம் சேர்ந்து கேட்போம்; என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடு:
“கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை முழு மனதுடன் பின்பற்ற விரும்புகிறேன். உம்மை பின்பற்றுவதிலிருந்து என்னைத் தடுப்பது எது என்பதை தயவுசெய்து எனக்குக் காட்டுவீராக. அது ‘ஒரு காரியமாக’ இருந்தாலும் சரி, ‘பல காரியமாக’ இருந்தாலும் சரி, உமக்காக நான் எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன், ஆமென்!”