(மெய்யான) ஒளி உள்ளே வரட்டும்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
சமீபத்தில், நான் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, ஒருமுறை அதிகாலை ஜெப நேரத்தில் ஆண்டவருடன் ஒரு அற்புதமான சந்திப்பின் தருணத்தைப் பெற்றிருந்தேன்.
அற்புதமான சூரிய உதயத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் காட்சி என்னை சிந்திக்க வைத்தது… இன்றைக்கு சூரியன் உதிக்கும்போது, நம் வாழ்க்கையின் மீது இன்னொரு ஒளி உதிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்: அதுதான் நம் ஆண்டவர் இயேசுவின் ஒளி! அவர் சொன்னார்: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” (வேதாகமம், யோவான் 8:12)
நம் வாழ்க்கையின் இருளான இடங்களில் ஆண்டவருடைய ஒளி பிரகாசிக்க வேண்டும்:
- நம்முடைய சோதனைகளின் மீது பிரகாசிக்க வேண்டும்.
- நம்முடைய வியாதிகளின் மீது பிரகாசிக்க வேண்டும்.
- நம்முடைய தோல்விகள் மற்றும் தவறுகளின் மீது பிரகாசிக்க வேண்டும்.
- நாம் போராடிக்கொண்டிருக்கும் எல்லா இடத்தின் மீதும் பிரகாசிக்க வேண்டும்.
கர்த்தருடைய வெளிச்சம் போகக்கூடாது என்று நாம் நினைக்கும் இடத்திற்கு கூட அது போக வேண்டியிருக்கிறது! பெரும்பாலும் பயத்தின் நிமித்தமாக, நாம் ரகசியமாக வைத்திருக்கும் அந்த இடங்களுக்குள் கர்த்தருடைய வெளிச்சம் ஊடுருவிச் செல்லவேண்டும். சில நேரங்களில் நாம் இவ்வாறு பதிலளித்த ஆதாமைப்போல இருக்கிறோம், “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்.” (வேதாகமம், ஆதியாகமம் 3:10)
உன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும், மிகுந்த இருள் நிறைந்த இடத்திலும் கூட கிறிஸ்துவின் ஒளி கடந்துசெல்ல இடங்கொடு. பயப்படாதிரு! இது வளர்ச்சியும் மறுவாழ்வும் அளிக்கும் ஒளி. ஏதாவது கறையையோ அசுத்தங்களையோ அந்த ஒளி வெளிப்படுத்திக் காட்டினால், ஆண்டவர் உன் உள்ளத்தையும் சிந்தனையையும் சுத்தம் செய்ய விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள். உன்னை அவர் தூய்மையாக்க விரும்புகிறார்.
ஒருவேளை அவர் கசப்பு, பொறாமை அல்லது பழிவாங்கும் எண்ணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தால் என்ன செய்வாய்? உன்னை மன்னிக்கவும் விடுதலையாக்கவும் வேண்டும் என்று நீ ஆண்டவரிடம் மன்றாடினால் மட்டும் போதும்.
ஆம், நீ இயேசுவைப் பின்தொடர்ந்தால் இருளில் நடக்க மாட்டாய்; மாறாக அவருடைய வாழ்வு தரும் ஒளியை நீ பெற்றிருப்பாய்!