பரலோகப் பிதாவின் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்
முகப்பு ›› அற்புதங்கள் ››
குழந்தைகளை வளர்த்தல், மேற்பார்வையிடல், சிட்சித்தல், வழிநடத்துதல் மற்றும் தங்களிடம் உள்ள அறிவைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்குதல் ஆகியவை பெற்றோரின் பணியாகும். பெற்றோராக இருப்பதன் பெரும் பாக்கியங்களில் இதுவும் ஒன்று! ஒரு தந்தையாக, நான் பெற்ற அனுபவங்களை என் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்வதையும் காரியங்களை அவர்களுடன் கலந்து பேசுவதையும் நான் விரும்புகிறேன்.
உன் பரலோகப் பிதாவாகிய ஆண்டவர், உனக்குப் போதிக்கவும், நீ பின்பற்ற வேண்டிய பாதையைக் காட்டவும் விரும்புகிறார்!
“ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.” (வேதாகமத்தில் உபாகமம் 8:5ஐப் பார்க்கவும்)
இரண்டு வயது குழந்தை 15 வயது இளம் வயதினரைப் போலவே பாடங்களைக் கற்றுக்கொள்வதில்லை. அவர்கள் இருவரும் வெவ்வேறு பருவங்களில் இருக்கிறார்கள், இதன் விளைவாக, அவர்களுக்கு ஒரே மாதிரியான கேள்விகளோ அல்லது தேவைகளோ இருப்பதில்லை.
ஆண்டவர் தம்முடைய ஜீவனை உனக்கு வழங்கி, மனம் திறந்து உன்னுடன் பேசும்படிக்கு, ஒவ்வொரு நாளும் உனக்காக ‘ஜெபம்’ என்ற மறைவான இடத்தில் அவர் காத்திருக்கிறார்.
ஆண்டவர் உன்னையும், உன் சூழ்நிலையையும், உன் வாழ்க்கையின் நிலைமையையும் நன்றாகப் புரிந்துகொள்கிறார். நீ சமாதானம் மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தாலும் சரி, அல்லது சந்தேகம் மற்றும் பயத்தால் குழம்பியிருந்தாலும் சரி, உனக்கு என்ன தேவை என்பது உன் பிதாவுக்கு நன்றாகத் தெரியும்.
அவருடைய வார்த்தையை வாசிப்பதன் மூலம், இப்போது நீ கடந்து சென்றுகொண்டிருக்கும் காலத்திற்கு ஏற்றதும், மிகவும் பொருத்தமானதுமான அவருடைய விலையேறப்பெற்ற ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள இயலும்.
அவருக்கு மறைவானது எதுவும் இல்லை என்பதாலும், உன் எதிர்காலத்தை அவர் நன்கு அறிந்திருப்பதாலும், மற்ற எந்த நபரையும்விட அவரால் உனக்கு சிறப்பாக ஆலோசனை வழங்க முடியும்!
இன்று நீ அவரைத் தனிப்பட்ட விதத்தில் சந்திக்க வேண்டும் என்று நான் உனக்காக ஜெபிக்கிறேன்.
சாட்சி: “ஒவ்வொரு நாளும், நான் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலை நான் வாசிக்கும்போது, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற பதில் ஆண்டவரிடமிருந்து எனக்குக் கிடைக்கிறது. ஆண்டவர் என் சத்தத்தைக் கேட்டு எனக்குப் பதிலளிக்கிறார் என்பதை அறிந்துகொண்டதால், நான் ஆவிக்குரிய ரீதியில் மிகவும் வளரச்சியடைந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் முன்னோக்கிச் செல்ல எனக்கு உதவும் இந்தச் செய்திகளுக்காக நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். தினமும் காலையில் எழுந்ததும், அன்றைக்கு தேவன் என்ன பேசப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். (யோசுவா)
![Signature_EricCelerier Signature_EricCelerier](https://language.jesus.net/wp-content/uploads/2022/03/Signature_EricCelerier.png)