பசியாய் இருக்கிறாயா? அப்படியென்றால் சாப்பிடு!
முகப்பு ›› அற்புதங்கள் ››
தேவனுடைய வார்த்தைதான் நமது உணவு என்று வேதாகமம் சொல்கிறது.
“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்று இயேசு சொன்னார். (வேதாகமத்தில் மத்தேயு 4 : 4ஐப் பார்க்கவும்)
எனவே, பூமிக்குரிய போஜனத்தைப் போலவே, ஆண்டவருடைய வார்த்தையானது நம்முடைய அடிப்படைத் தேவைகளில் ஒன்றை நிறைவேற்றுவதாய் இருக்கிறது. அது நமது ஆற்றலைப் புதுப்பிக்கிறதாய் இருக்கிறது. அது, அடிப்படையாகவே, நமது நன்மைக்காக இருக்கிறது.
ஆகவே, நீ இன்று தேவனிடத்தில் பசிதாகமுள்ள ஒருவராய் இருந்தால்… சுவையான காலை உணவைப் புசி!
- அவருடைய வார்த்தையைப் புசி, அப்போது நீ திருப்தியடைவாய்.
- அவருடைய வார்த்தை நம் மனதை ஆழமாகப் பேணிப் பராமரிக்கிறது.
நாம் மனதளவில் சோர்வடையும்போது, அவருடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது மற்றும் நம் வாழ்வை உயர்த்துகிறது. நாம் நம்பிக்கையற்று இருக்கும் சமயங்களில், அவருடைய வார்த்தையானது நமது நம்பிக்கையைப் புதுப்பித்து, வெற்றியும் சிறந்த எதிர்காலமும் நமக்கு உண்டு என்று நம்புவதற்கான சூழலைத் தருகிறது! நாம் வெறுமையாகவும், குறிக்கோளற்றவர்களாகவும் உணரும்போது, அவருடைய வார்த்தையானது நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும், நாம் ஜீவித்திருப்பதற்கான மதிப்பையும் தருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த சிந்து என்ற நபர் நம்முடன் பகிர்ந்துகொள்ள விரும்புவது இதுதான்: “இந்தச் செய்திகளுக்காக நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள என் விசுவாசமானது பெருகியிருக்கிறது, நான் தினமும் ஆண்டவருடைய வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும், ஆண்டவர் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது, ஆண்டவர் எனக்காக ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆண்டவர் எப்போதும் என்னோடு கூட இருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் என்னைக் கருத்தாய் கவனித்து வருகிறார். நான் ஆண்டவருடைய கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறேன். ஜெபித்ததற்காக மிக்க நன்றி.”
நீ வேரூன்றி ஆழமாக வளர அவருடைய வார்த்தைக்கு இடங்கொடு. “பரிசுத்த வேத வாக்கியங்களால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டும் ஊக்குவிக்கப்பட்டும் இருக்கிறேன், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ எனது அன்றாட வாழ்க்கையில் உண்டாகிற ஏற்றத்தாழ்வுகளுக்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கிறது” என்று நவினி எனக்கு எழுதியதைப்போல், இன்று, உள்ளான மனதில் நீ புதுப்பிக்கப்படுவாயாக!
119வது சங்கீதத்தில் 9 முதல் 18 வரையிலான இந்த வசனங்களைக் கொண்ட இந்தப் பகுதியை தியானிக்கும்படி உனக்கு அழைப்புவிடுத்து இந்த செய்தியை நிறைவுசெய்ய விரும்புகிறேன்.
“வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளை விட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மன மகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”
![Signature_EricCelerier Signature_EricCelerier](https://language.jesus.net/wp-content/uploads/2022/03/Signature_EricCelerier.png)