நீ ஜீவனோடு இருப்பதற்காக வருத்தப்படாதே!

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ ஜீவனோடு இருப்பதற்காக வருத்தப்படாதே!

ஒரு நாள், “உயிருடன் இருப்பதற்கு வருந்துகிறேன்!” என்று ஒருவர் சொன்னதை நான் கேட்டேன். நான் திகைத்துப்போனேன். ஆனாலும்…

  • அநேகர் தங்கள் வாழ்க்கை பயனற்றது என்று நினைக்கிறார்கள். உயிரோடு இருப்பதை எண்ணி வருத்தப்படுகிறார்கள். ஆனால் தேவனோ அவர்களது வாழ்க்கையைக் குறித்த ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அவர் சமாதானத்தையும் நல்ல எதிர்காலத்தையும் அவர்களுக்கு வழங்கும்படியான திட்டங்களை வைத்திருக்கிறார்! (வேதாகமத்தில் பார்க்கவும், எரேமியா 29:11)
  • அநேகர் தங்களைத் தாங்களே விரும்புவதில்லை. தாங்கள் உயிருடன் இருப்பதை எண்ணி வருந்துகிறார்கள். ஆனால், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்று இயேசு சொல்லியிருக்கிறார் (வேதாகமத்தில் மத்தேயு 19:19ஐப் பார்க்கவும்) இது ஆச்சரியம் அல்லவா? நாம் நம்மை நேசிக்க வேண்டும் என்பது ஆண்டவரின் விருப்பமாகும்!
  • அநேகர் குழந்தைகளாக இருந்தபோது, அவர்கள் வாழ்விற்கு மதிப்பு உண்டு என்றோ அல்லது அவர்கள் விலையேறப்பெற்றவர்கள் என்றோ யாரும் அவர்களுக்குச் சொன்னதில்லை. அதற்குப் பதிலாக, “நீ ஒன்றுக்கும் உதவாத நபர்,” “உன்னால் எதையும் செய்ய முடியாது,” “நீ ஒருபோதும் வெற்றிபெற மாட்டாய்,” “நீ ஒருபோதும் எதையும் சாதிக்க மாட்டாய்” என்பன போன்ற எதிர்மறையான கருத்துகளால் அவர்கள் வெட்கத்தை மாத்திரமே அனுபவித்திருக்கலாம். ஆகவே உயிருடன் இருப்பதை எண்ணி அவர்கள் வருந்துகிறார்கள். ஆனால் ஆண்டவர் அவர்களைப் பார்த்து, “நீ என் அன்பு மகன்/மகள், நான் உன்னை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறுகிறார். (வேதாகமத்தைப் பார்க்கவும், மத்தேயு 3:17)
  • அநேகர் பலவீனமானவர்களாய் காணப்படுகின்றனர், வியாதியாலோ அல்லது மீளமுடியாத சூழ்நிலைகளாலோ பாதிக்கப்பட்டவர்களாய் உள்ளனர். தாங்கள் உயிரோடு இருப்பதை எண்ணி வருத்தப்படுகிறார்கள். ஆனால் சர்வவல்லமையுள்ள தேவன் அவர்களைப் பார்த்து, “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று சொல்கிறார். (வேதாகமத்தைப் பார்க்கவும், ஏசாயா 41:10)
  • அநேகர் தங்கள் வாழ்க்கையை தேவனுக்குள் முழுமையாக வாழ்வதில்லை, குற்ற உணர்வுடனும் அவமானத்துடனும் வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை எண்ணி வருத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பரிபூரண ஜீவன் உண்டாயிருக்கும்படியே இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” (வேதாகமத்தைப் பார்க்கவும், ரோமர் 8:1)
  • அநேகர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, ஏதோ ஒரு விதத்தில் தாங்கள் குறைந்த திறன் கொண்டவர்களாகவும், குறைந்த சாமர்த்தியம் கொண்டவர்களாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களும் தாங்கள் உயிருடன் இருப்பதை எண்ணி வருந்துகிறார்கள். ஆனால் தேவன் அவர்களை பராக்கிரமம் செய்யும் விசேஷித்தவர்களாக சிருஷ்டித்திருக்கிறார்! “தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்” என்று வேதாகமம் சொல்கிறது. (வேதாகமத்தில் சங்கீதம் 60:12ஐப் பார்க்கவும்)
  • அநேகர் சரீரப் பிரகாரமாகவும், நடத்தை ரீதியிலும், ஆவிக்குரிய ரீதியிலும் மற்றும் உணர்ச்சி ரீதியிலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தங்கள் மீதும், மற்றவர்கள் மீதும், ஆண்டவர் மீதும் நம்பிக்கையை இழந்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதை எண்ணி வருந்துகிறார்கள். ஆனால் நம் பிதாவாகிய தேவன் அவர்கள் மீது மிகுந்த அன்புள்ளவராய் இருக்கிறார். அவர்களை மீட்டெடுக்க அவர் ஏங்குகிறார்! அவர் ஒருபோதும் அவர்களை விட்டு விலகமாட்டார்; அவர்களைக் கைவிடவுமாட்டார். (வேதாகமத்தைப் பார்க்கவும், யோசுவா 1:5)

என் நண்பனே/தோழியே, இந்தப் பட்டியலில் நீயும் இருப்பதைக் காண்கிறாயா? அப்படியானால், உயிருடன் இருப்பதை எண்ணி வருத்தப்படாதே. ஆண்டவர் உன்னைக் குணப்படுத்தி விடுவிப்பார் – அவர் உனக்கு சிறந்ததை அளிக்க விரும்புகிறார்!

உயிருடன் இருப்பதற்காக வருத்தப்படும் ஒருவரை நீ சந்தித்தால், அந்த நபரை அன்போடு கண்ணோக்கிப் பார்த்து, அவரை/அவளை உற்சாகப்படுத்து, ஏனென்றால் ஆண்டவர் தமது இறுதி முடிவு இதுதான் என்று சொல்லிவிடவில்லை!

இன்று என்னுடன் சேர்ந்து இதை அறிக்கையிடுவாயாக: “கர்த்தாவே, உயிருடன் இருப்பதை எண்ணி நான் மீண்டும் வருத்தப்பட மாட்டேன். நான் ஏற்கனவே வருத்தப்பட்ட நேரங்களை நினைத்து மனம் வருந்துகிறேன். நீர் என்னை சிருஷ்டித்தீர்! நீர் என்னை நேசிக்கிறீர், என் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திட்டம் உம்மிடம் இருக்கிறது என்று நான் முழுநிச்சயமாய் நம்புகிறேன். என் வாழ்வில் நீர் அளித்த வாக்குத்தத்தங்களை எப்பேர்பட்ட பயமோ வெட்கமோ தடுக்க முடியாது! நான் நம்பிக்கை வைப்பதைத் தெரிந்துகொள்கிறேன், வாழ்க்கையை வாழ்வதைத் தேர்ந்தெடுக்கிறேன், என்னை நானே மன்னிக்க முன்வருகிறேன்… மேலும் என்னை நானே நேசிக்கத் தீர்மானிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக், உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! எனக்கு 56 வயதாகிறது; அடுத்த மாதம் 57 வயதை அடைந்துவிடுவேன். நேற்றைய தினம் முழுவதும், தொலைந்துபோன மற்றும் மறந்துபோன கனவுகளைப் பற்றிய கெட்ட எண்ணங்கள் எனக்குள் வந்துகொண்டிருந்தன. வாழ்க்கையில் நான் சாதித்தது மிகக் குறைவு என்பதாக உணர்ந்தேன். இளமை பருவத்தில் நான் கண்ட கனவுகள் பல தொலைந்துவிட்டன; அவைகள் நிறைவேற முடியாதவை என்பதைப்போலத் தோன்றின. இன்று இந்தச் செய்தியானது எனக்குக் கிடைக்க வேண்டிய ஒன்றுதான். நான் மீண்டும் கனவு காண்கிறேன், நான் மீண்டும் நம்பிக்கையுடனும் ஆவலுடனும் இருக்கிறேன். பிதாவே உமக்கு நன்றி!” (ஹென்றி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!