நீ எப்படி தேவனை நன்கு அறிந்துகொள்வாய்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ எப்படி தேவனை நன்கு அறிந்துகொள்வாய்?

நீ ஒரு நபருடன் சேர்ந்து குறைந்தது 1 கிலோ அளவு உப்பை சாப்பிட்டுமுடிக்காத வரைக்கும், அதாவது அத்தனை முறை அவருடன்/அவளுடன் சேர்ந்து உணவு உண்ணாதவரைக்கும், உன்னால் அந்த நபரைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள முடியாது என்று ஆசிய பழமொழி ஒன்று கூறுகிறது… இதில் ஒரு உண்மை இருக்கிறது, அது என்னவென்றால்… ஒரு நபரை உண்மையாக அறிய, அந்த நபருடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதுதான்.

தன்னை வெளிப்படுத்தி உன்னுடன் நேரத்தைச் செலவிட விரும்பும் ஒரு நபர் யார் என்று உனக்குத் தெரியுமா? பரலோகத்தில் உள்ள உன் பிதாவாகிய தேவன்தான் உன்னுடன் நேரம் செலவிட விரும்புகிறார்!

“‘என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார் …’’ (வேதாகமத்தில், 1 நாளாகமம் 28:9ஐப் பார்க்கவும்)

தம்மைத் தேடுபவர்களுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்! நீ தேவனைத் தேடுகிற ஒரு நபர் என்றும், அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள விரும்புகிறாய் என்றும் நான் நம்புகிறேன்… அதனால்தான் நீ “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த மின்னஞ்சலுக்குப் பதிவு செய்துள்ளாய்.

கர்த்தரோடு கூட ஜெபத்திலும், அவருடைய வார்த்தையைத் தியானிப்பதிலும் அதிக நேரத்தை நீ செலவிடுமாறு நான் உன்னை உற்சாகப்படுத்துகிறேன். பகலோ இரவோ எந்த நேரமாக இருந்தாலும் சரி, நீ அவருக்கு நேராகத் திரும்பி, அவருடைய சத்தத்தைக் கேட்கும்படிக்கு உன் செவியைச் சாய்த்து, அவரை ஆராதிப்பதற்கு உன்னை ஆயத்தப்படுத்தலாம்!

நீ அவரைத் தேடுவதாலும், அவர் உன்னை நேசிப்பதாலும் தேவன் தம்மை உனக்கு வெளிப்படுத்துவார். அவருடைய குரலை அதிகமாகக் கேட்க ஆசைப்படுகிறாயா? துதி பாடல்களைப் பாடி அவரை ஆராதித்து, இன்றே இந்தக் காரியத்தை அவரிடம் கேட்கும்படி நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்!

நாம் ஒன்றாக இணைந்து ஜெபிப்போம்… “கர்த்தாவே, உம்மை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள, உமது பிரசன்னத்திற்காக நான் தாகமாக இருக்கிறேன். நான் உம்முடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். உமது குரலின் ஒலியைக் கேட்கவும், அதைப் பகுத்தறியவும் நான் ஏங்குகிறேன். உமது பிரசன்னத்திற்கு நேராக எனது இருதயத்தையும், உமது சத்தத்திற்கு நேராக என் செவிகளையும் விழிப்படையச் செய்வீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!