“நீ எதற்கும் தகுதியற்ற நபர்” என்று யாராவது உன்னிடம் சொன்னதுண்டா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
சில சமயங்களில் நாம் பள்ளியில் படித்த வருஷங்களில் நடந்த சம்பவங்கள், அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத நினைவுகளையும் வடுக்களையும் நமக்கு விட்டுச்சென்றிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, இன்றைய நமது கல்வி முறைகளில் மாணவர்களுக்கு உண்மையானதும், நிரந்தரமானதுமான ஊக்கமும் பாராட்டும் கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
அதற்கு மாறாக, “நீ எதற்கும் பிரயோஜனமற்றவன் /பிரயோஜனமற்றவள்,” “நீ தேர மாட்டாய்,” “நீ அவ்வளவு புத்திசாலி இல்லை,” அல்லது “இதைச் செய்வதற்கான திறமை உனக்கு இல்லை”… என்பன போன்ற வார்த்தைகளைக்கொண்ட கிரேடுகள், தண்டனைகள் அல்லது ஒப்பீடுகள் போன்ற செய்திகளை மட்டுமே அடிக்கடி நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்..
ஆனால் ஆண்டவர் நம்மிடம் முற்றிலும் வித்தியாசமான ஒரு காரியத்தைக் கூறுகிறார்!
அவருடைய குரலை மட்டுமே நாம் கேட்க வேண்டும்.
ஆண்டவர் உன்னிடமும் என்னிடமும், அதாவது நம்மிடத்தில், “உனக்கு முழு திறனும் உண்டு! உனக்கு கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது… நீ புத்திசாலி மற்றும் உனக்கு எல்லா தகுதியும் உண்டு! ஆண்டவர் உன்னை நம்புகிறார். நீ ஏற்கனவே பல சவால்களை சந்தித்து ஜெயித்துவிட்டாய்! இன்னும் ஒரு அடி எடுத்துவைத்து, முன்னேறிச் செல்… நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கூறுகிறார்.
நண்பனே/தோழியே, இந்த வார்த்தைகள் இன்று உன் வாழ்வில் நிறைவேறட்டும். அவை உன்னை கைதூக்கி எடுத்து நிறுத்தட்டும்!
அவற்றை மறுபடியும் ஒருமுறை வாசித்துவிட்டு கேளு. “உனக்கு முழு திறனும் உண்டு! உனக்கு கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது… நீ புத்திசாலி மற்றும் உனக்கு எல்லாத் தகுதியும் உண்டு! ஆண்டவர் உன்னை நம்புகிறார். நீ ஏற்கனவே பல சவால்களை சந்தித்து ஜெயித்துவிட்டாய்! ஒரு அடி எடுத்துவைத்து, முன்னேறிச் செல்… ஆண்டவர் உன்னோடு கூட இருக்கிறார்!” என்று உனக்கு நீயே அறிவித்துக்கொள்.
கூடுமானால், இந்த அழகான, நேர்மறையான பாடலைப் பாடி இன்று காலையில் ஆண்டவரை ஆராதிக்கும்படி நான் உன்னை அழைக்கிறேன்: https://youtu.be/usy2nqFVcSE
இதோ அந்தப் பாடலிலிருந்து சில வரிகள்: “எல்லாமே முடிந்தது என்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர், இனி என்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர், ஆனாலும் உங்க கரம் மீண்டும் என்னை வனைந்தது, என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே…”
இன்று நிறைவான ஆசீர்வாதத்தோடு வாழு!
சாட்சி: “வணக்கம், கிறிஸ்துவுக்குள் எனக்குப் பிரியமான நண்பரே: இந்தக் குறிப்பிட்ட மின்னஞ்சலைப் படித்ததன் மூலம் எனக்கு எப்படிப்பட்ட உறுதிப்படுத்தல் கிடைத்தது என்பதை என்னால் விவரித்து மாளாது. ‘வாழ்க்கையை அல்லது ஜெபக் குழுவைத் தொடங்கு’ என்று என் மனதிற்குள் சொல்லுகிற குரலை நான் கேட்டுக்கொண்டிருந்தேன், அதே நேரத்தில், ‘நான் தகுதியானவள் அல்ல; நான் அவ்வளவு படித்தவள் அல்ல; நான் வேத பண்டிதர் அல்ல என்று எனக்குள் சொல்கிற வெறொரு குரலையும் கேட்டேன். ஆனால், அந்த நேரத்தில், எங்கள் போதகர் நாங்கள் அப்படிப்பட்ட தகுதியைப் பெற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசித்து, அவரை நம்முடைய கர்த்தராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு, அவருக்குச் சேவை செய்வோமானால், அப்போது கர்த்தருடனான நம் வாழ்வைத் தொடங்குவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோம் என்று சொன்னார்.
நான் பலமுறை எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறேன், நம்முடைய ஆண்டவர் அந்தப் புயல்களிலிருந்து என்னை வெளியே கொண்டுவந்திருக்கிறார். அவர் வாக்குப்பண்ணியபடியே தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய வார்த்தைகள் சத்தியம். இந்த மின்னஞ்சலை வாசித்ததும், நீங்கள் அனுப்பிய செய்தியைப் பார்த்து நான் வியப்படைந்தேன். எனக்குப் பிடித்த சில வசனங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. நான் அவற்றை என் குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொண்டேன். எனது முதல் ஜெபக்குழுவை நான் துவங்கியிருக்கிறேன். ஆண்டவருடைய மகத்தான செயல்களுக்கு நான் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும், இழந்துபோனவர்களை தேவனண்டைக்குக் கூட்டிச் சேர்க்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். எங்களை அணுக இந்த அற்புதமான இணையதளத்தை வைத்திருக்கும் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” (லிசா)
![Signature_EricCelerier Signature_EricCelerier](https://language.jesus.net/wp-content/uploads/2022/03/Signature_EricCelerier.png)