தற்செயலான சந்திப்புகளா? அல்லது அப்படி இல்லையா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
சமீபத்தில், நான் ஒரு சக ஊழியரிடம் பேசினேன். எங்கள் உரையாடலுக்குப் பிறகு, அவர் எனது குழுவில் உள்ள ஒருவரையே “தற்செயலாக” சந்தித்தார் என்றும், இறுதியில் அவர்கள் விசுவாசத்தைப் பற்றிய விரிவான உரையாடலைப் பேசி முடித்தனர் என்றும் கூறினார். இப்படி சில சமயங்களில் அடிக்கடி நிகழ்வது ஆச்சரியமாக இருக்கிறது. சில காரியங்கள் உண்மையில் விளக்க இயலாத ரீதியில் உனக்கு நடக்கிறது. சில சமயங்களில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன, ஆனால் பெரும்பாலும் இந்த ரகசியங்களுக்கு விளக்கம் கிடைக்காமலேயே போய்விடும்.
இன்று நாம் இரண்டு தற்செயலான சந்திப்புகளைப் பற்றி வாசிக்கிறோம். மரியாளும் யோசேப்பும் இயேசுவைத் தேவாலயத்துக்கு அழைத்து வருகிறார்கள் – அது அந்தக் காலத்தில் நிலவிய ஒரு பழக்கமாகும். ஒவ்வொரு குழந்தையும் ஆண்டவருக்கு “அர்ப்பணிக்கப்படுவதற்காக” அங்கு கொண்டுவரப்பட்டது.
அன்றைய நாட்களில் இந்தத் தேவாலயம் மத வழிபாட்டு மையமாக இருந்துவந்தது. ஏராளமானோர் அங்கு வந்தனர். யோசேப்பும் மரியாளும் பிரபலமானவர்களாக (பிரபல இஸ்ரவேலர்கள்) இருந்ததில்லை. மேலும் பலர் தங்கள் குழந்தையை அர்ப்பணிக்க அங்கு வந்திருந்தனர்.
தேவாலய வளாகத்தில், இரண்டு பேர் “தற்செயலாக” அவர்களை அணுகுகிறார்கள். அவர்களில் முதலாவதாக சந்தித்தது சிமியோன் பின்னர் அன்னாள். அவர்களுடன் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றிய விசேஷித்த காரியங்களை உரைக்கிறார்கள். அவர்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, மரியாளையும் யோசேப்பையும் எச்சரித்தனர். அது இயேசுவின் பெற்றோரிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இது நடக்கும் என்று சிமியோனும் அன்னாளும் நீண்ட காலமாக அறிந்து காத்திருந்தார்கள். ‘இரட்சகரைக் காணும் முன்பு நீ மரிக்கமாட்டாய்’ என்று சிமியோனுக்கு முன்னமே கூறப்பட்டிருந்தது. அன்றைய தினம் பரிசுத்த ஆவியானவர் அவரை ஆலயத்திற்குச் செல்லும்படி ஏவினார். அன்னாளுடனான சந்திப்பிலும் அப்படித்தான் நடக்கிறது. இப்போது மீட்பர் வந்திருப்பதால், எருசலேமுக்கு விடுதலை நெருங்கிவிட்டது என்பதை அவள் காண்கிறாள்.
நிச்சயமாக, இவை தற்செயலான சந்திப்புகள் அல்ல. மக்களை அங்கு கூடிவரச் செய்ய, ஆவியானவர் மூலமாக தேவன் கிரியை செய்தார்.
ஆவியானவர் நம் வாழ்வில் கிரியை செய்வதைப்போலவே, அவர்கள் வாழ்விலும் கிரியை செய்தார். தேவ ஆவியானவர் எப்போதும் கிரியை செய்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும், உங்கள் வாழ்க்கையிலும் கிரியை செய்துகொண்டிருக்கிறார். உங்களையே நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். இவை “தற்செயலான காரியங்கள்தான்” என்று சீக்கிரத்தில் சொல்லிவிட வேண்டாம். ஆவியானவரே உங்கள் வாழ்வில் கிரியை செய்கிறார்.
![Signature_EricCelerier Signature_EricCelerier](https://language.jesus.net/wp-content/uploads/2022/03/Signature_EricCelerier.png)