கர்த்தருடைய வழிகளில் உண்மையாக இரு

முகப்பு ›› அற்புதங்கள் ›› கர்த்தருடைய வழிகளில் உண்மையாக இரு

“நீ ஆண்டவருக்கு உண்மையாக இரு… மற்ற யாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்!”

ஒரு வேலை கிடைப்பது என்பது எப்போதும் எளிதான ஒன்று அல்ல, உண்மையில், அது நம்மை மிகவும் சோர்ந்துபோகச் செய்யும் காரியமாகும். நான் இளைஞனாக இருந்தபோது, வேலை தேடி சுமார் 300 விண்ணப்பங்களை அனுப்பியிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. இறுதியாக வரவேற்பாளராக ஒரு வேலை கிடைத்து, 3 வாரங்களில் அந்த வேலையிலிருந்து நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன்! என்ன நடந்தது என்பதை இதோ விவரிக்கிறேன்.

ஒரு நாள், மேலாளர் அலுவலகத்தில், வழக்கம்போல் தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசினேன். தொலைபேசியில் அழைத்தவர் அங்கே அறையில் இருந்த ஒருவரிடம் என்னை பேசச் சொன்னார். மேலாளர் என்னிடம் காதில் மெதுவாக, “அவர்கள் சந்திக்க முயற்சிக்கும் நபர் இங்கே இல்லை என்று சொல்” என்றார். நான், “மன்னிக்கவும், என்னால் பொய் சொல்ல முடியாது” என்று பதிலளித்தேன். மேலாளர் மீண்டும் ஒருமுறை வற்புறுத்தியபோதிலும், நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றேன். என்னால் பொய் சொல்ல முடியவில்லை, ஏனென்றால் அது என் விசுவாசத்திற்கு எதிராகக் காணப்பட்டது. மூன்றாவது முறை, மேலாளர் என்னிடம், “அவள் இங்கே இல்லை என்று சொல்லு, அல்லது நீ வேலையிலிருந்து நீக்கப்படுவாய்!” என்று நேரடியாகச் சொன்னார். நான் மீண்டும் மறுத்ததால், மேலாளர் என் கையிலிருந்த தொலைபேசியைப் பறித்துக்கொண்டு, என்னை அந்த இடத்திலேயே என் வேலையிலிருந்து நீக்கம் செய்துவிட்டார்.

அலுவலகத்தை விட்டுச் செல்வதற்கு முன், நான் ஒவ்வொரு பணியாளருக்கும் புதிய ஏற்பாட்டின் ஒரு பிரதியைக் கொடுத்து, நான் ஏன் என் வேலையை இழந்தேன் என்பதை அவர்களுக்கு விளக்கினேன். அன்று மாலை, நான் துக்கத்துடனே திருச்சபைக்குச் சென்றேன்.

இந்த வரவேற்பாளர் வேலையைத் தவிர, எனது மற்ற வேலை விண்ணப்பக் கடிதங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டன. நான் தேடி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைத்த இந்த வேலையை நான் இழந்த பிறகு, மீண்டும், நான் புதிதாக தொடங்குவதைப் போல உணர்ந்தேன். ஆனால் அடுத்த நாள், ஒரு நிறுவனத்தினர் என்னைத் தொடர்புகொண்டு, “நாங்கள் பணியமர்த்திய நபர் எங்கள் குறிக்கோள்களுக்குப் பொருந்தவில்லை. எங்கள் பட்டியலில் நீங்கள் இரண்டாவது இடத்தில் உள்ள நபர். நீங்கள் எங்களைப் பார்க்க வர விரும்புகிறீர்களா?” என்று கேட்டனர். மிகவும் எதிர்பாராத விதமாக, நிறுவனம் எனக்கு பதினான்கு மாத சம்பளமும், ஆறு வார விடுமுறையும் அளித்தது மற்றும் அது எனது திறமைக்கு ஏற்ற வேலையாக இருந்தது. மொத்தத்தில், அது நான் மிகவும் எதிர்பார்த்து விரும்பிய வேலையாக இருந்தது!

அந்தப் பதவி ஆண்டவருடைய அற்புதமான பரிசாக இருந்தது. எனது பணியிடத்திலிருந்து திருச்சபைக்குத் தேவையான இசைத்தட்டுப் பிரதிகளை எனது முதலாளியின் ஆசியுடன் அச்சிட முடிந்தது. எனது திருச்சபையின் இளைஞர் முகாம்களில் குழுத் தலைவராக இருப்பதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது. எனது முந்தைய வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்காக நான் ஒரு நிமிடம் கூட வருத்தப்படவில்லை!

நம் வாழ்வின் மிகவும் கடினமான சூழ்நிலைகள் சில சமயங்களில் நம்மை நம் இலக்குகளுக்கு நேராக வழிநடத்துகின்றன. ஆண்டவர் மட்டுமே நமது எதிர்காலத்தை அறிவார்.‌ உத்தமமாக நடக்கவும், அவருடைய வழிகளில் உண்மையாக இருக்கவும் நான் உன்னை ஊக்குவிக்கிறேன். மற்ற யாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்!

இந்த வேத வசனம் இவ்வாறு கூறுகிறது, “உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; …” (சங்கீதம் 25:3)

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, உம்மை மீண்டும் முழுமையாக நம்புவதற்கு நான் இன்று தெரிந்துகொள்கிறேன்! என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் உமது கரங்களில் வைத்திருப்பதற்கு நன்றி. உமது வழிகளில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க இன்று எனக்கு உதவும். நீர் ஒருபோதும் என்னை விட்டு விலக மாட்டீர், என்னைக் கைவிட மாட்டீர் என்பதை நான் அறிவேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களது ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல்களானது உண்மையில் என் உயிரைக் காப்பாற்றி, எனக்கு நம்பிக்கையைத் தருகின்றன. நானும் என் கணவரும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தில்/சோதனையில் இருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து, நான் ஓய்வு பெறுவேன் என்று நினைத்துக்கொண்டிருந்த, நான் விரும்பிய ஒரு நிர்வாகப் பணியிலிருந்து அநியாயமாக நீக்கப்பட்டேன், ஏனெனில் நான் மோசடி மற்றும் ஊழலுக்குக் கைகொடுத்துவிட்டேன். வேலையில்லா திண்டாட்டம் நேரிட்டது, நான் வேலையில்லாமல் இருப்பதை உணர்ந்தேன் – 70க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த பிறகும் ஒருவர் கூட என்னை நேர்காணலுக்கு அழைக்கவில்லை. எங்களிடம் இருந்த சில நகைகளை விற்க வேண்டியிருந்தது, இப்போது மளிகைப் பொருட்களை வாங்குவதற்கும் கட்டணங்களை செலுத்துவதற்கும் எங்கள் திருமண மோதிரங்களை விற்க வேண்டியுள்ளது. என் கணவர் மட்டும் வேலை செய்கிறார். உங்கள் மின்னஞ்சல்களைப் பெற்றதிலிருந்து, ஆண்டவர் “பனிப்பந்துகள்” வடிவில் எனக்குக் காட்சியளித்தார். நீங்கள் விரும்பினால் என்னால் இதை இன்னும் விரிவாக விளக்க முடியும். நிதி உதவியைக் குறிக்கும் இந்த சிறிய பனிப்பந்துகள் சுற்றி வர ஆரம்பித்துள்ளன. பணத் தேவைகளைச் சந்திக்க இயலாவிட்டாலும், எங்கள் வீட்டிற்கு கிடைக்கும் ஒவ்வொரு பைசாவிலும் தசமபாகம் கொடுப்பதில் நாங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் – நாங்கள் ஆண்டவரை நம்புகிறோம். உங்களது மின்னஞ்சல்கள் எனக்கு நம்பிக்கையை அளித்து, ஆண்டவரை நம்பி, அவருடனும் மற்றவர்களுடனும் நெருங்கி பழகவும் எங்களுக்கு உதவியது. நாங்கள் எந்த வகையிலும் பண கஷ்டங்களை விட்டு வெளியே வரவில்லை, ஆனால் ஆண்டவர் எங்களை நேசிக்கிறார் என்பதையும், அவர் எங்களை விடுவிப்பார் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.” (மேரி, ராய்ப்பூர்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!