ஆண்டவர் உண்மையிலேயே பதில் அளிக்கத் தாமதிக்கிறாரா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீ எப்போதாவது ஒரு மருத்துவமனை, சிகையலங்கார நிலையம் அல்லது உணவகங்களில் காத்திருப்பு அறையில் காக்கவைக்கப்பட்டிருக்கிறாயா? சில நேரங்களில் காத்திருப்பு சகித்துக்கொள்ளக்கூடியது… நமக்கு நியாயமான ஒன்றாகத் தெரிகிறது. மற்ற நேரங்களில் அது மிகவும் அதிகமான நேரமாக இருக்கிறது… பல மணி நேரங்கள் ஆகிறது… அதிக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்! இதற்கு மேல் காத்திருக்க நாம் விரும்புவதில்லை. அந்தக் காத்திருப்பு அறையிலிருந்து வெளியேற விரும்புகிறோம்!
“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.” (பிரசங்கி 3:11)
வாக்குத்தத்தத்திற்கும் அது நிறைவேறுவதற்கும் இடையில் எவ்வளவு காலம் இருக்கிறது? ஆண்டவர் உன்னை மறந்துவிட்டாரா? அவர் உன்னை ஏமாற்ற நினைக்கிறாரா? அவர் பொய் சொன்னாரா? இந்தக் கேள்விகளுக்கான உறுதியான பதில் இது தான்: இல்லை! நிச்சயமாக இல்லை.
ஆண்டவரால் உன்னை மறக்க முடியாது. அவர் நிச்சயமாக உன்னைப் பரியாசம் செய்யவில்லை, புறக்கணிக்கவில்லை, அல்லது உன்னிடமிருந்து நன்மையானதை மறைத்து வைக்கவில்லை. சரி… அப்படியென்றால் என்னதான் நடக்கிறது? காத்திருப்பு என்பது வாக்குத்தத்தம் நிறைவேறுவதின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். உன்னுடைய அழைப்பும் இதில் பொருந்தும். காத்திருப்பும் வாக்குத்தத்தமும் பிரிக்க முடியாதவை.
காத்திருப்பு அறையில் தான் உன்னுடைய குணாதிசயம் வடிவமைக்கப்பட்டு உருவாகிறது. இந்த அறையில்தான் நீ வலிமையையும் நிதானத்தையும் பெறுகிறாய். அவருடைய பிரசன்னத்தின் ரகசிய இடத்தில்தான் ஆண்டவருடன் உன் நெருக்கம் வளர்கிறது.
நீ அவரை நன்கு புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறாய், அவருடைய குரலின் ஒலியை ஆயிரம் குரல்களுக்கு மத்தியில் வேறுபடுத்தி கண்டறிகிறாய். இதனால், அடுத்த படிக்கு, உயர்ந்த இடத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் வரும்போதும், ஆண்டவர் கதவைத் திறக்கும்போதும் உனக்காகக் காத்திருப்பதைப் பெற்றுக்கொள்ள நீ தயாராக இருக்கிறாய்.
“நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்…” (ஏசாயா 30:15)
சமாதானத்துடனும் நம்பிக்கையுடனும் பொறுமையாகக் காத்திரு, ஏனென்றால் ஆண்டவரின் தெய்வீக வாக்குத்தத்தம் அதன் வழியில் நிறைவேற உள்ளது!
![Signature_EricCelerier Signature_EricCelerier](https://language.jesus.net/wp-content/uploads/2022/03/Signature_EricCelerier.png)