ஆண்டவரைத் துதிப்பதற்கான 3 நல்ல காரணங்களை இங்கே காணலாம்… ✌️
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, கர்த்தருடன் நெருங்கி ஜீவித்தல் மற்றும் அவரில் வளர்ச்சியடைதலைப் பற்றி நான் உன்னுடன் பேச விரும்புகிறேன். இந்தப் பூமியில் நீ வாழ்வதை மற்றவர்களைவிட அதிகம் விரும்பும் ஒருவருடன் நெருங்கி வருவதற்கான ஒரு அம்சத்தை நாம் ஒவ்வொரு நாளும் ஆராய்வோம்! இந்தத் தொடர் உனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்து, ஆண்டவர் மீதான உன் விசுவாசத்தையும் அறிவையும் பெருக்க உதவ வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
“கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி” என்ற பத்தியை வேதாகமத்திலிருந்து நீ வாசித்திருக்கக் கூடும். (கொலோசெயர் 3:16)
நீ அதை ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அனுபவித்திருக்கலாம்: துதியில் விசேஷித்த கிருபை இருக்கிறது.
எனவே, ஆண்டவரைத் துதிப்பதற்கான 3 நல்ல காரணங்களை இங்கே கொடுத்துள்ளேன்:
- துதி உன்னை ஆண்டவருடைய சமூகத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
- துதி ஆண்டவருடைய கரத்தை செயல்பட வைக்கிறது.
- துதித்தல் உனக்கு மனஅமைதியைத் தரும்.
மன அழுத்தம் நிறைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, கிறிஸ்துவின் முழு சரீரமாகிய சபையாராக சேர்ந்து துதிக்கும் இந்தத் துதியின் நேரம் ஒரு புதிய காற்றை சுவாசிக்கும் தருணமாகும். வாழ்வின் சோதனைகளுக்கு மத்தியில், நீ தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல துதியானது உனக்கு உதவிகரமாய் அமையும். மேலும் ஒரு நற்செய்தியைப் பெற்ற பிறகு அல்லது உன் ஜெபத்திற்குப் பதில் கிடைத்த பிறகு, ஆண்டவருக்கு உன் நன்றியை மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுத்துவதற்கு துதி உனக்கு வாய்ப்பளிக்கிறது.
நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் உனக்கு சவால் விடுகிறேன்… நீ உன் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்தாலும் சரி, உன் காரில் அல்லது பொது போக்குவரத்து வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாலும் சரி, உனக்குப் பிடித்த துதி பாடலை ஒலிக்கச் செய்து நீயும் ஆண்டவரைத் துதிப்பாயாக! அதன் பிறகு நீ என்ன உணர்கிறாய் என்பதை உனது குறிப்பேட்டில் அல்லது உன் ஸ்மார்ட்போனில் எழுதி வைக்கலாம்.
உனது துதி விலையேறப்பெற்றது! ஆண்டவரிடம் நெருங்கி வரவும், அவரில் வளரவும் அது உனக்கு உதவுகிறது. இது உணவு உண்பது, பல் துலக்குவது போன்ற பழக்கவழக்கங்களைப்போல இதுவும் உன் வாழ்வின் அன்றாடப் பழக்கமாக மாறட்டும். ஒவ்வொரு நாளும் ஆண்டவரைத் துதிப்பதன் மூலம் உன் ஆத்துமாவுக்கு நன்மை செய்வதில் நீ ஆர்வம் காட்டு. நான் உனக்காக என் முழு மனதுடன் ஆண்டவரைத் துதிக்கிறேன்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “’அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம் ஆண்டவர் என்னுடன் பேசுவதை நான் விரும்புகிறேன். எனக்கு ஊக்கம், அன்பு, அறிவுரை, ஞானம் போன்றவை தேவைப்படும்போது, ஆண்டவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார். இது உங்களது வார்த்தைகள் மூலம் நடக்கிறது. எரிக், நம் ஆண்டவரும் இரட்சகரும் தேவைப்படும் ஆத்துமாக்களைத் தொட அவர் உங்களைப் பயன்படுத்துகிறார். நன்றி, நம் ராஜாவாகிய இயேசுவுக்கு துதி உண்டாவதாக. ❤” (கிரேஸ், திண்டுக்கல்)