தேவனால் கூடாதது ஒன்றுமில்லை!
முகப்பு ›› அற்புதங்கள் ››
சமாதானம் மற்றும் மன்னிப்புக்கான பாதையை அடிப்படையாகக்கொண்ட ஒப்புரவாகுதல் என்னும் இத்தலைப்பில் உள்ள நமது தியானத்தை நாம் இன்றுடன் நிறைவுசெய்கிறோம்.
ஒப்புரவாகுதல் பற்றிய இந்த வாரத் தொடரை நீ நன்கு புரிந்துகொண்டாய் என்றும், அது உனக்குப் பிரயோஜனமாய் இருந்தது என்றும் நான் நம்புகிறேன்! இன்று பல வாசகர்களின் சாட்சிகளை உன்னுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம், உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்!
இந்த வாசகர்களின் உறவுகளை ஆண்டவரால் மிகவும் நேர்த்தியாக சரிசெய்யக் கூடுமானால், உன் வாழ்விலும் அவரால் அதைச் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்! 🙂
சலோமி நம்மிடம் கூறுகிறார்: “நான் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலைப் பெறத் தொடங்கியபோது, என் கணவருடன் எனக்குப் பிரச்சனைகள் இருந்தன. நான் புண்படுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், எதிர்மறையான எண்ணங்கள் பல எனக்கு இருந்தன. ஆனால் இந்த தினசரி செய்தியை நான் படிக்க ஆரம்பித்த நாள் முதல், என் நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது, என் விசுவாசம் வலுவடைந்தது, நான் ஆண்டவருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டேன். குணப்படுத்துதலுக்கு நேரான செயல்முறை சீராக சென்றது. இன்று, என்னால் மன்னிக்க முடிகிறது, ஆண்டவருடைய சமாதானம் என் வீட்டில் இருக்கிறது. என் கணவரும் எனக்கு மிகவும் சாதகமான முறையில் மாறிவிட்டார். நாங்கள் இருவரும் இசைந்து வாழ்கிறோம்.”
இது அற்புதம் இல்லையா? நதியா எனக்கு அனுப்பிய மற்றொரு சாட்சி இதோ: “சமீபத்தில் என் கணவருடன் அடிக்கடி பிரச்சனைகளை சந்தித்து வந்தேன். ஆனால் மன்னிப்பதன் மூலம், நான் வித்தியாசமான முறையில் நேசிக்கக் கற்றுக்கொண்டேன். நீண்ட காலமாக, எங்கள் திருமண பந்தத்தில் ஏமாற்றம் நிலவியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, உங்களது மின்னஞ்சல்களும் வெவ்வேறு சாட்சிகளும் நிபந்தனையற்ற அன்பு, எப்போதும் மன்னித்தல் என்று கர்த்தரைப் பின்பற்றி வாழ எனக்குக் கற்றுக்கொடுத்தன. இப்போது, நாங்கள் சர்வவல்லமையுள்ள ஆண்டவருடைய நிபந்தனையற்ற அன்போடு வாழக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.”
விக்டர் தனது சாட்சியை இவ்வாறு எழுதியுள்ளார்: “நான் என் வாழ்க்கையில் ஒரு பயங்கரமான காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தேன் – நான் நேசித்த நபர்களால், நான் காட்டிக் கொடுக்கப்பட்டேன், என் குடும்ப உறுப்பினர்களே என்னைக் காட்டிக்கொடுத்தனர். இனி ஒருக்காலும் யாரையும் மன்னிக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். நான் மிகவும் வெறுப்புடனும் கசப்புடனும் இருந்தேன், பழிவாங்க வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலில், நான் வாசித்த சாட்சிகளும் வசனங்களும் என் மனதையும் இதயத்தையும் மாற்றியது. இந்த மின்னஞ்சல்கள் ஆண்டவருடைய மகத்துவத்தையும் விசுவாசத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க எனக்கு உதவியது. என்னுடன் இணைந்திருப்பதற்கு நன்றி.”
நம் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாம் ஆண்டவரை வைக்கும்போது, அவர் நம்மை எவ்வாறு வெற்றிபெறச் செய்கிறார் என்பதைக் கவனித்துப் பார்! ஆண்டவரால் முடியாதது என்று எதுவுமில்லை என்பதை திரையிட்டுக் காட்டும் இந்த நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள இன்று உன்னை ஊக்குவிக்கிறேன். எப்படிப்பட்ட உடைந்த குடும்பமானாலும் அவரால் ஊக்கப்படுத்தி கட்டியெழுப்ப முடியும்; நொறுங்கிப்போன திருமண பந்தத்தை மீண்டும் இணைப்பது அவருக்குக் கடினமானதல்ல. நம்பிக்கையற்ற சூழ்நிலை என்ற எதுவும் ஆண்டவருக்கு இல்லை! அவரால் எல்லாம் கூடும்.
இதோ, அவர் தம் பிள்ளைகளுக்கு அளிக்கும் வாக்குத்தத்தம்: “அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.” (ஏசாயா 61:4)
நீ ஆண்டவரால் மிகவும் நேசிக்கப்படுகிறாய்! இந்த நாள் உனக்கு மிக அருமையான நாளாக அமையட்டும்!
