உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு!🏸
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று எப்படி இருக்கிறாய்? 3வது நாளாக, நாம் வேதாகமத்திலிருந்து ‘தேவையானது ஒன்றே’ என்ற தொடரை தியானிக்க இருக்கிறோம். நீ முதல் நாள் அல்லது 2வது நாள் தியானத்தை தவற விட்டுவிட்டாயா? கவலைப்படாதே, அவற்றை எங்கள் வலைதளத்துக்குச் சென்று வாசிக்கலாம்.
உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பூப்பந்து விளையாட்டுதான்! என்னால் அதை மணிக்கணக்கில் விளையாட முடியும். சில சமயங்களில், “நான் நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் பூப்பந்து விளையாட்டு மட்டுமே விளையாட விரும்புகிறேன்” என்று என் மனைவியிடம் நகைச்சுவையாகச் சொல்வேன்.
நீ நாள் முழுவதும் அதைச் செய்யக்கூடிய அளவுக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஒரு காரியம் உனக்கு இருக்கிறதா?
தாவீதைப் பொறுத்தவரை, கர்த்தருடைய ஆலயத்தில் நேரத்தை செலவிடுவதே அவரது மிகப்பெரிய ஆசையாக இருந்தது.
“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்,
அதையே நாடுவேன்;
நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்,
அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும்,
நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” (சங்கீதம் 27:4)
தம்மை எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்று ஆண்டவர் உபாகமம் 12வது அத்தியாயத்தில் தமது மக்களுக்குப் போதித்தார். “உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவர வேண்டும்” என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
பழைய ஏற்பாட்டில், ஆராதனை செய்ய தேவன் வாசம் செய்த இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது, தாவீதின் நாட்களில் அது தேவனுடைய கூடாரம் என்று அழைக்கப்பட்டது. தான் வாசம் செய்ய அதைவிட ஒரு சிறந்த இடத்தை தாவீதால் கற்பனை செய்ய முடியவில்லை. இன்று, உனக்கும் எனக்கும் ஒரு மிகப்பெரிய பாக்கியம் உண்டு – அது என்னவென்றால், இயேசு சிலுவையில் நமக்காக முற்றிலும் பலியானதால், இனி பலியிடும்படிக்கு ஒரு மாம்ச பிரகாரமான இடத்திற்கு நாம் செல்ல வேண்டியதில்லை, அவரது பலியே போதுமானது.
இருப்பினும், அவர் வாசம்பண்ணத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் நாம் ஆண்டவரைத் தேடுவது மட்டுமே நமக்குத் தேவையான ஒன்று. அப்படியென்றால், இந்த நாட்களில் அவர் எங்கு வசிக்கிறார்? அவர் உனக்குள்ளேதான் வசிக்கிறார்!
“நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரிந்தியர் 3:16) மற்றும் விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கிறார் (எபேசியர் 3:17).
“கர்த்தாவே, இன்று உமது வாசஸ்தலமாக இவரது இதயத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இவரது இதயம் இப்போது உமது பிரசன்னத்தால் நிரப்பப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென்.”